தமிழ் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி இருக்காங்களே சிபிஐ அதிகாரிகள்! என்று கூறுகின்றனர் இன்றைய நிகழ்வுகளைப் பார்த்து விட்டவர்கள்!
நேற்று உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், உச்ச நீதிமன்றமும் உடனடியாக விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென தலைமறைவானார்.
அவர் தலைமறைவானது குறித்து சமூகத் தளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காக இன்று இரவு திடீரென காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த ப.சிதம்பரம், செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி கொடுத்தார்.
பின்னர் அவசரம் அவசரமாக பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார். அவர் சென்ற பின்னர், செய்தியறிந்து சிபிஐ அதிகாரிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அதற்குள் சிதம்பரம் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது குறித்து கேலி செய்யும் சமூக ஊடக நெட்டிசன்கள், தமிழ் சினிமா போலீஸ் மாதிரி இப்படி சிதம்பரம் அங்கிருந்து சென்ற பின்னர் சிபிஐ அதிகாரிகள் அங்கு சென்றார்களே! என்று கருத்திடுகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பு கொடுப்பது என்றால், முன்கூட்டியே ஊடகங்களுக்கு தகவல் கொடுத்திருப்பார்கள். அப்படி ஊடகத்தினர் வரும் வரையில் தகவல் சிபிஐ அதிகாரிகளுக்கு மட்டும் செல்லாமல் இருந்தது எப்படியோ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் ப.சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்றனர் சிபிஐ அதிகாரிகள்.