முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது சிபிஐ நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது சிபிஐ நீதிமன்றம்!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், தாம் ஏற்கெனவே சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்ததாகவும், சிபிஐ தரப்பில் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்றும் கூறப் பட்டது.
இதை அடுத்து, அவர் வியாழன் இன்று பிற்பகல், தில்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரம், சிபிஐ., விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப் பட்டது. எனவே, சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர், சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சிபிஐ அதிகாரிகள் கேட்கிறார்கள்! அவரிடம் கேட்பதற்கு சிபிஐ வசம் கேள்விகள் ஏதும் இல்லை. நேற்றைய விசாரணையின் போது கேட்கப்பட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகளுக்கு ஏற்கெனவே சிதம்பரம் பதிலளித்துவிட்டார் என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்தி வைத்து சற்று நேரம் கழித்து அறிவிப்பதாகக் கூறினார். பின்னர், சிபிஐ அனுமதி கேட்டபடி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இருப்பினும், ப.சிதம்பரத்தை தினமும் அரை மணிநேரம் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிபிஐ., தரப்பு விசாரணை முடிந்த பின்னர் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
இதை அடுத்து ப.சிதம்பரத்தை சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர் சிபிஐ அதிகாரிகள்!
முன்னதாக, ப.சிதம்பரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க, 14 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியதாக தகவல் வெளியானது.