சண்டிகர்: ஹரியாணாவில் பெண் சிசு படுகொலை சம்பவங்களின் எதிரொலியாக தற்போது ஆண் – பெண் விகிதம் படுபாதாளத்தில் உள்ளது.
பெண் இல்லை என்றால் தலைமுறையே இல்லை என அறியாமல், பெண் சிசுக்களை கொன்று வந்தவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. மேலும் பெண் வீட்டாரிடம் அதிக அளவில் வரதட்சணைக் கேட்டு பெண்ணை மணம் முடித்து வந்த பின்பும் வரதட்சணை கொடுமையால் இன்று பல்வேறு மரணங்கள் நிகழ்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசு படுகொலையில் ஈடுபட்ட குடும்பங்கள் அனைத்தும் இன்று தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு மணமுடிக்க ஒரு பெண் கிடைக்காமல் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு ஏற்ற அளவில் ஹரியாணாவில் பெண்கள் இல்லாததால் பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண அண்டை மாநிலங்களில் இருந்தும், அவ்வளவு ஏன் நேபாளத்தில் இருந்தும் ஹரியாணா இளைஞர்களுக்கு மணமுடிக்க மணப்பெண்களை பணம் கொடுத்து வாங்கி வரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பெண்ணுக்கு எத்தனை சவரன் நகை போடுவீர்கள், பையனுக்கு பைக்கா வாங்கி தருவீர்களா? காரா? வீடு வாங்கி தருவீர்களா என்றெல்லாம் பேரம் பேசிய மணமகன் வீட்டார் இன்று, பெண்ணின் குடும்பத்துக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்று பேரம் பேசி முடித்து மணப்பெண்களை அவர்களது அழகு, கல்வி, குடும்ப பின்னணிக்கு ஏற்ற அளவில் விலை கொடுத்து வாங்கி வருகிறார்களாம். அந்த வகையில் பெண்ணின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை மணமகன் வீட்டார் வரதட்சணையாகக் கொடுக்கிறார்களாம்
பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், நேபாளம் வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரதட்சணைக் கொடுத்து பேசி முடிக்கிறார்கள்.
இதில், ஏராளமான தரகர்களும், பல்வேறு ஊரகப் பகுதிகளில் இருக்கும் பெண்களை அழைத்து வந்து ஹரியாணா குடும்பங்களுக்கு அதிக விலைக்கு விற்றுச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
கலாசாரம், மதம், இனம், மாநிலம், மொழி என எல்லாத் தடைகளையும் மீறி, மணமுடிக்கப் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு ஹரியாணா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது இதுதானோ!