அன்று சரத் பவார் செய்ததைத்தான் இன்று அஜித் பவார் செய்துள்ளார் என்றும், எனவே இன்று அஜித் பவார் செய்ததை, அன்று அதையே செய்த சரத் பவார் குறைகூற முடியாது என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
மஹாராஷ்டிராவில் பாஜக., மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததை நியாயப் படுத்தும் வகையில் சில விளக்கங்களைக் கூறியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா.
மஹாராஷ்டிராவில் யாருமே எதிர்பாராத திடீர் திருப்பமாக பாஜக.,வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் ஆதரவுடன் இன்று மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். இன்றைய காலை நேரச் செய்திகள் இதைக் கூறிய போது, சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்ரேவு ஆகியோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். பாஜக., செய்தது தவறு என்று சிலரும், சரியானதே என்று சிலரும் கூறி வரும் நிலையில், தமிழக பாஜக.,வின் மூத்த தலைவரும் பாஜக., தேசிய செயலருமான எச்.ராஜா அவரது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பவை….
தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக விற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது.மேலும் உடனடியாக தேர்தல் வருவதையும் தவிர்க்க வேண்டும். தனது கடமையை சரியாக நிறைவேற்றி முதல்வர் பொறுப்பேற்றுள்ள திரு பட்னவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1978 ல் 37 எம்.எல்.ஏ க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஷரத்பவார் அவர்கள் ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அன்று ஷரத்பவார் செய்தது தவறில்லை என்றால் இன்று அஜித் பவார் செய்ததை ஷரத்பவார் எப்படி குறைகூற முடியும்.
மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது. – என்று அவர் கூறியுள்ளார்.