காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது! ஸ்ரீநகர் வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரிவினைவாதிகள் எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
தற்போது, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதை அடுத்து, அங்கே விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், பிரிவினைவாதிகள், காஷ்மீரில் கடையடைப்பு நடத்தப் பட வேண்டும் என்றும், வர்த்தக நிறுவனங்கள் இயக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அச்சுறுத்தல் சுவரொட்டிகளை ஒட்டினர்.
இந்த அச்சுறுத்தல்களால், வேலைநிறுத்தம் கடையடைப்பு போன்றவற்றின் போது பிரச்னை ஏற்படும் என்ற பயத்தில் பொது மக்கள் வெளியே வர தயங்கினர். இந்நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்தினர். சந்தேகத்திற்குரிய பல நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஸ்ரீநகரில் மக்கள் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்!
பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளின் சுவரொட்டிகளால் அச்சத்தில் இருந்த பொதுமக்கள், ஞாயிற்றுக் கிழமை தாராளமாக வெளியில் வந்தனர். நான்கு நாட்கள் கடையடைப்பட்டிருந்த காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மீண்டும்இயல்பு நிலை திரும்பியது. இதை அடுத்து ஸ்ரீநகர் வாரச் சந்தை களைகட்டத் தொடங்கியது.
ஞாயிற்றுக் கிழமை கடைகளுக்கு பொருள்கள் வாங்க மக்கள் ஏராளமானோர் திரண்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைகள் திறக்கப்பட்டன, மக்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் மினி பேருந்துகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.