தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் முதல் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் வாங்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
தென்காசி புதிய மாவட்டம் கடந்த வெள்ளிக் கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. புதிய மாவட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அதிகாரி என நிர்வாகம் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், திங்கள் கிழமை இன்று மனுநீதி நாள் எனும் வகையில், பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியும் வகையில் மனு பெறப் படும் என்று ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்திருந்தார்.
அதை அடுத்து தென்காசி ஆர்டிஓ – வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சுப்பராஜா மஹாலில் இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட வருவாய் அதிகாரி கல்பனா, கோட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப் பட்டிருந்ததால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து, மனுக்களை அளித்தனர்.