
சென்னை அருகே, தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்ககூடாது எனக்கூறி, போலீஸ்க்காரரை அவரது கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்தார். படுகாயமடைந்த காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் 31 வயதான வெங்கடேசன்.
பிஎஸ்சி படித்த அவர், 2016-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார்.
தற்போது தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சனிக்கிழமை இரவு திடீரென உடல் முழுவதும் தீ எரிந்தபடி வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து அவசர ஊர்தி மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
வாக்குமூலத்தில், விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கடேசன்.
இவரது தந்தை தங்கப்பா சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இதனால் அவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடியிருந்து வருகிறார்.
சென்னையில் பிறந்து, வளர்ந்த வெங்கடேசன், சூளையில் உள்ள செங்கல்வராயன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
அப்போது அதே பள்ளியில் தன்னுடன் படித்த ஜெயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பின்றி கடந்த 2012-ம் ஆண்டு ஜெயாவை வெங்கடேசன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனா்.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் வெங்கடேசன் பணியாற்றியபோது, அவரது நண்பர் ஜோதி ராமலிங்கத்தின் மனைவி ஆஷா உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது தொடர்பு குறித்து அறிந்த ஆஷாவின் கணவர், அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனைவியை பிரிந்து இருந்த வெங்கடேசனும், ஆஷாவும் காவலர் குடியிருப்பில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனா்.
இந்நிலையில், 20 நாட்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
சனிக்கிழமை இரவு காலதாமதமாக சென்ற வெங்கடேசன் உடன், ஆஷா மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்னர் வெங்கடேசன் தூங்கச் சென்றுவிட்டார். நள்ளிரவு ஒரு மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் உடம்பில் பெட்ரோலை ஊற்றிய ஆஷா, அவர் மீது தீ வைத்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதை அடுத்து ஆஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெங்கடேசனால், தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், தற்போது வெங்கடேசனும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு தன்னை வெறுத்ததாக கூறியுள்ளார்.
இதனால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்கக்கூடாது என நினைத்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆஷாவை கைது செய்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
காதலருக்காக கணவரை பிரிந்து வந்த நிலையில், அவரும் கைவிட்டதால் ஆத்திரமடைந்த பெண், பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



