பெண்களுக்கு அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்றார் தெலங்காணா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
கேன்சர் ஒரு வலியோடு கூடிய நோய் என்றும், கேன்சர் பற்றி பெண்களுக்கு புரிதல் அவசியம் என்றும் எடுத்துரைத்தார் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
உலக கேன்சர் தினம் தொடர்பாக ஹைதராபாதில் கேர் மருத்துவமனையில் கேன்சர் பிரீ ஸ்கிரீனிங் ப்ரோக்ராமுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை பேசுகையில் ஆரோக்கியம் பற்றி பெண்களுக்கு சிரத்தை தேவை. ஆரோக்கியம் பற்றி பெண்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வதில்லை. அழகைவிட ஆரோக்கியமே முக்கியம்! என்று எடுத்துரைத்தார்.
மேலும், பெண்களுக்கு ஆரோக்கியத்தை விட புடவைகள் நகைகள் மீது அதிகம் ஆர்வம் உள்ளது. நெப்ரோலஜிஸ்ட் ஆன என் கணவர் இலவசமாக டயக்னஸிஸ் செய்தார். ஒரு எக்ஸிபிஷனில் நாங்கள் டயக்னசிஸ் பரிசோதனைகள் ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது பெண்கள் புடவைக் கடைக்கு அதிகமாகச் சென்றார்கள். ஆனால் ஸ்கிரீனிங் ஸ்டாலுக்கு வரவில்லை. அவர்களை அழைத்து ஸ்கிரீனிங் செய்தபோது அவர்களில் கேன்சர் உள்ள பெண்கள் இருந்தார்கள் என்று கூறினார்.
புற்று நோய் கடைசி நிலையில்தான் பெரிதாக வெளித் தெரிகிறது என்றும் புற்றுநோய் கண்ட நோயாளிக்கு குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் தேவை என்றும் தமிழிசை கூறினார்.
ஒவ்வொருவரும் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்றும் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்ட டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், நம் அடிப்படை வேர்களை மறந்து போகக் கூடாது என்றும் நம் பாரம்பரிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்றும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசின் சீஃப் விப் கொங்கடி சுனீதா பங்கு கொண்டார். 500 பேருக்கு மேல் இலவசமாக ஸ்கிரீனிங் நடத்தியதற்கு கொங்கடி சுனீதாவுக்கு ஆளுநர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.