பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரை திருச்சபை பணிகளிலிருந்து போப் பிரான்சிஸ் நீக்கியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் சிரியன் – மலபார் கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ளது. இந்த திருச்சபையின் அருட்தந்தையாக ராபின் வடக்கன்சேரி (51) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
மேலும், அங்குள்ள ஒரு பள்ளியின் மேலாளராகவும் அவர் பொறுப்பு வகித்திருந்தார்.
இதனிடையே, அந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவியை பலாத்காரம் செய்ததாக ராபின் வடக்கன்சேரி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த போக்சோ நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் ராபின் வடக்கன்சேரியை திருச்சபையின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் நீக்கியுள்ளார்.