
எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் பொது ஊரடங்குக் காலத்தில் இந்த மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மனதின் குரலின் பொருட்டு வந்த ஆலோசனைகள், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது, எப்போதும் வருவதை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றது. ஏகப்பட்ட விஷயங்களை தனக்குள் தாங்கிக் கொண்டு, உங்களது இந்த மனதின் குரல் என் வரையில் வந்திருக்கின்றது.
இவற்றை எத்தனை அதிகம் முடியுமோ அத்தனை அதிகம் படிக்க வேண்டும், கேட்க வேண்டும் என்று நான் முயற்சி செய்தேன். பரபரப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்தில் கவனம் செலுத்த முடியாத பலவற்றின் மீது நீங்கள் அனுப்பியிருக்கும் விஷயங்கள் கவனத்தைச் செலுத்த வைத்திருக்கின்றன, புதிய பார்வையோடு அணுக வைத்திருக்கின்றன. போருக்கு இடையே நடைபெறும் இந்த மனதின் குரலில், அப்படிப்பட்ட பரிமாணங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்ள மனம் விரும்புகிறது.
நண்பர்களே, பாரதத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பற்றிச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இது மக்களால் இயக்கப்படும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராடி வருகிறார்கள், நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள், மக்களோடு இணைந்து நிர்வாகமும் போரை நேர்கொண்டு வருகிறது. பாரதம் போன்றதொரு விசாலமான தேசம், வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் தேசம், ஏழ்மைக்கு எதிரான தனது அறுதிப் போரை முடுக்கி விட்டிருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான போரிலே வெற்றி பெற மக்கள் அனைவரின் பங்களிப்பு மட்டுமே வழி. மேலும், நாம் செய்த பெரும்பேறாக எதைக் கொள்ள வேண்டும் என்றால், இன்று நாடு முழுவதும், நாட்டின் அனைத்துக் குடிமக்களும், இந்தப் போரிலே போர்வீரர்களாகத் தலைமையேற்றுப் போராடி வருகிறார்கள் என்பது தான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும், இந்தப் போர் மக்களே தங்களுடையது என்று கருதி நடத்தும் போர் என்பதை உணர்வீர்கள். எதிர்காலத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெறும் வேளையிலே, இதுபற்றிய வழிமுறைகள் பற்றிப் பேசப்படும் காலத்திலே, இந்தியா நடத்திய போராட்டம் மக்கள் ஏற்று நடத்திய போராட்டம் என்பதாகவே விவாதிக்கப்படும்.
நாடு முழுவதிலும், ஒவ்வொரு தெரு-குடியிருப்புப் பகுதியிலும், அனைத்து இடங்களிலும், இன்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக, உதவியாக இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவளிப்பதாகட்டும், ரேஷன் முறையாகட்டும், பொது ஊரடங்கைப் பின்பற்றுதலாகட்டும், மருத்துவமனைகள் பின்பற்றும் வழிமுறையாகட்டும், மருத்துவக் கருவிகளை நாட்டிலேயே ஏற்படுத்தலாகட்டும் – இன்று நாடு முழுவதும் ஒரு இலக்கு, ஒரு திசை என்பதை நோக்கிப் பயணித்து வருகிறது. கரவொலிகள், தட்டொலிகள், விளக்கு, மெழுகுவர்த்திகள் என அனைத்து வகைகளிலும் மக்களின் உணர்வுகள் உயிர் பெற்றன. செயல்புரிய வேண்டும் என்ற பேராவல் உந்த, மக்கள் மனதில் உறுதி வடிவெடுத்தது, அனைவரும் இவற்றால் உத்வேகம் அடைந்தார்கள். நகரமாகட்டும், கிராமமாகட்டும், நாட்டிலே ஒரு மாபெரும் யாகம் நடைபெறுவது போலவும், இதில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்கத் துடிப்போடு இருப்பதாகவுமே எனக்குப் படுகிறது.
நமது விவசாய சகோதர சகோதரிகளைப் பாருங்கள்…. ஒருபுறம் இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே தங்கள் வயல்களில் இரவுபகலாக உழைத்து வருகிறார்கள்; தேசத்தில் யாரும் பட்டினியோடு உறங்கி விடக்கூடாது என்று மறுபுறம் கரிசனத்தை மனதில் தாங்கி வியர்வை சிந்தி வருகிறார்கள். அனைவரும் தங்களது சக்திக்கு உட்பட்டு இந்தப் போரிலே பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வீட்டு வாடகையைத் தள்ளுபடி செய்கிறார்கள் சிலர், வேறு சிலர் தங்கள் ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகையையோ, விருதுப் பணமாக கிடைத்ததையோ PM CARESக்கு அளிக்கிறார்கள். சிலர் வயலில் விளைந்த அனைத்துக் காய்கறிகளையும் தானமாக அளிக்கிறார்கள் என்றால், இன்னும் பிறர் இலவசமாக உணவு அளித்து வருகிறார்கள். சிலர் முகக்கவசங்களைத் தயாரிக்கிறார்கள். தனிமைப்படுத்தலில் இருக்கும் நமது சில ஏழை தொழிலாளர் சகோதர சகோதரிகள் அவர்கள் தற்போது வசிக்கும் பள்ளிகளுக்குச் சுண்ணம் அடித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் மனதின் குரல்…11ஆவது பகுதியில் இருந்து…
ஒலிபரப்பு நாள்: 26.04.2020
தமிழாக்கம் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்


