கடந்த இரு நாட்களைப் போல், வெள்ளிக்கிழமை இன்று மாலையும், 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து, 3ஆம் கட்ட புதிய சலுகை அறிவிப்புகளை மேற்கொள்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத், என்ற தன்னிறைவு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் கடந்த இரு நாட்களாக அறிவிப்புகளைச் செய்து வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்றும் சில அறிவிப்புகளைச் செய்யவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 12ஆம் தேதி தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்; இந்த அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நாட்களில் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.
அதன்படி, கடந்த இரு நாட்களாக தில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளைச் செய்தார். முதல்கட்ட அறிவிப்பில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.
2ஆம் கட்ட அறிவிப்பில் ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டங்களை அறிவித்தார். சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இதில் இட பெற்றிருந்தன.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.