
மேற்கு வங்கத்தைத் தாக்கிய அம்பான் புயலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.
வங்காள விரிகுடாவில் உருவான அம்பான் புயல் புதன் கிழமை இரவு மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயலுக்கு மேற்கு வங்கத்தில் 10 முதல் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளும், பள்ளிக் கட்டடங்களும் சேதமடைந்தன.
24 பர்கானாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகள் புயலால் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரசை விட அம்பான் புயல் மேற்குவங்கத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக மாநில- முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
அம்பான் புயல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊடகங்களிடம் தெரிவித்த போது, மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம். ஒருபுறம் கொரோனாவுடன் நாங்கள் போராடுகிறோம். மறுபுறம் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக தற்போது புயல். அம்பான் புயல் கொரோனாவை விட பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். இந்தச் சூழலில் அரசியல் செய்வதை விடுத்து, மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து மக்களை காக்க வேண்டும் என்று கூறினார்.