
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயது கொண்ட கர்ப்பிணி யானை, காட்டில் இருந்து உணவு தேடிஅருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றது. அங்குள்ள சிலர், யானையை விரட்டுவதற்காக, அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர்.
மனிதர்கள் வழங்கிய உணவை நம்பிக்கையுடன் அந்த யானை உண்டதும். அதன் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் சதை கிழிந்து, தொண்டையும் வாயும் புண்ணான நிலையில், அந்த யானை தண்ணீரில் நின்று அந்த எரிச்சலைத் தணிக்க முயன்றது. ஆனால், வலி தாளாமல் தனது உயிரை விட்டது.
இந்தச் சம்பவத்தை நிலம்பூரில் உள்ள வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
அவர் பதிவில்… யானை ஒன்று கிராமத்தில் உணவு தேடி அலைந்தது. அப்போது மனிதர்களின் சுயநலத்தை அறியாத யானை அவர்கள் வெடிமருந்தை மறைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தை வாங்கியது.
கர்ப்பிணியான அந்த யானை வயிற்றில் உள்ள குட்டிக்காக அந்த உணவை நம்பி வாங்கியது. அந்தப் பழத்தை உண்ணத் தொடங்கியது. அப்போது அதில் இருந்த வெடிமருந்து வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய் யானை, தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன் வயிற்றில் இன்னும் 18 அல்லது 20 மாதங்களில் பிறக்கப் போகின்ற குட்டியை நினைத்து கவலைப்படத் தொடங்கியது.
வெடி வெடித்தவுடன் வாயில் பயங்கர காயம் ஏற்பட்டது. உடனே பசி மற்றும் வலியால் அந்த யானை அங்கும் இங்கும் சுற்றியது. எனினும் அந்த யானை மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. யாரையும் தாக்கவில்லை, யாருடைய வீட்டையும் சேதப்படுத்த வில்லை. வலி தாள முடியாமல் வெள்ளியாற்றுள் நின்றது.

தண்ணீரில் தனது வாயையும் தும்பிக்கையையும் மூழ்கடித்தபடி நின்றது. அதனைப் பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. வாயில் புண் ஏற்பட்டபோது அதில் மற்ற பூச்சிகள் வந்து கடிப்பதை தவிர்க்கவே அது தண்ணீரில் நின்றிருக்கலாம். உடனே இரு ஆண் யானைகளை வனத்துறையினர் வரவழைத்து அதை கரைக்குக் கொண்டு வர முயற்சித்தோம். ஆனால் அதை மீட்பதற்குள் நின்றபடியே உயிரைவிட்டது. இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 27ஆம் தேதி நடந்தது.
அதைப் பார்த்த போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அழைத்து வரப்பட்ட யானைகளும் மிக வேகமாக அங்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டன. இந்த யானைகளின் அழுகையாலும் மனிதர்களின் சுயநலத்தைக் கண்டும் ஆற்று நீரே கொதிக்கத் தொடங்கியதாக எனக்குள் தோன்றியது!
அந்த யானை கர்ப்பமாக இருந்தது என்பதை பிரேத பரிசோதனை செய்த போதுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். அந்த யானையை நாங்கள் இறுதியாக அடக்கம் செய்தோம். ஒரு மனிதனாக அந்த சகோதரியிடம் (யானை) என்னால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடிந்தது என்று விவரித்திருந்தார்.
இந்தப் பதிவு பெரும் அளவில் எதிரொலித்தது. தேசிய அளவில் சமூகத் தளங்களில் இது குறித்து விவாதங்கள் அதிகரித்தன. கேரள மாநிலத்தின் மலபார் பகுதி குறித்து பலரும் விமர்சித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கை வனத்துறை விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்த மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது….

கேரளாவில் மலப்புரத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டதை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கவனித்துள்ளது. இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்வது போன்ற செய்கைகள், இந்திய கலாச்சாரத்துக்கு உண்டானதில்லை என்று தெரிவித்துள்ளார்.

