மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள் மற்றும் காவல் சோதனைச் சாவடிகளில் தன்னார்வலர்களாக கொரோனா தடுப்பு பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மற்றும் பணிக்காக வெளியே வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. அ
தன்படி பொது வெளிகளில் நடமாடும் மக்கள் முகக்கவசம் அணிவது காட்டாயமாக்கபட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு பல மாநில அரசுகள் அபராதம் விதித்தும், சிறையில் அடைத்தும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பொதுவெளியில் முகக்கவசம் இன்றி வரும் பொதுமக்களுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்ட நிர்வாகம் நூதன தண்டனை விதித்து வருகிறது.
அதன்படி பொதுவெளிகளில் முகக்கவசம் இல்லாமல் வரும் பொதுமக்கள் 3 நாட்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் காவல் சோதனைச் சாவடிகளில் தன்னார்வலர்களாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள குவாலியர் மாவட்ட ஆட்சியர், குஸ்லேந்தர் விக்ரம் சிங், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்கள், கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் முன்கள வீரர்களின் கடமைகளைச் செய்ய வேண்டியிருக்கும் எனவும், கொரோனா மருத்துவமனைகள் மற்றும் காவல் சோதனைச் சாவடிகளில் மூன்று நாட்கள் தன்னார்வலர்களாக பணியாற்ற வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.