இந்தியா திறமைகளின் அதிகார மையம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இன்று முதல் 3 நாள் நடைபெறும் கருத்தரங்கில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா திறமைகளின் அதிகார மையம் – பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கு தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
ஈஷா மைய நிறுவனர் சத்குரு, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் மூன்று நாள் கருத்தரங்கில் உரை நிகழ்த்துகின்றனர். பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் – வர்த்தக துறை அதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நாடு இன்று இருக்கும் சிக்கலான நேரத்தில் மறுமலர்ச்சியை பற்றி பேசுவது இயற்கை. உலக அளவில் இந்தியர்களின் திறமையின் பங்களிப்பை உலகம் கண்டிருக்கிறது. இந்தியா திறமைகளின் அதிகார மையம் என்று பிரதமர் மோதி பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய தொழில்நுட்பத் துறையையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் யார் மறக்க முடியும் என்று கூறிய பிரதமர் மோதி, இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக வழி காட்டி வருகின்றனர் என்றும், பங்களிப்பு செய்ய ஆர்வமுள்ள திறமைகளின் சக்தி வீடு இந்தியா என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
ஒருபுறம் இந்தியா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான போரை நடத்துகிறது; கடந்த ஆறு ஆண்டுகளில் தொழில் துவங்க எளிதான சூழல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எதையெல்லாம் அசாத்தியம் என்று நம்பப்படுகிறதோ… அவற்றை சாத்தியமாக்கி காட்டுவதற்கான திறமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுகள் காண வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று கூறிய மோதி, தொற்றுநோய்க்கு எதிரான போரை நடத்திக் கொண்டு பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம். என்றார்.
மேலும், சிறு குறு தொழில் மேம்பாட்டுக்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்… என்றும், கடந்த 6 ஆண்டுகளில் வரி சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக லாபம் ஈட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது… என்று கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோதி, சுயசார்பு பாரத திட்டம் உள்ளூர் உற்பத்தியை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றார்.
நமஸ்தே எனப்படும் வணக்கம் தெரிவிக்கும் முறை கொரோனா காலத்தில் உலக நாடுகளை சென்றடைந்துள்ளது என்று முத்தாய்ப்பாகத் தெரிவித்தார் பிரதமர் மோதி.