
கேரள தங்க கடத்தல் விவகாரத்தை NIA விசாரிப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார் மேலும் மத்திய அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கேரள தங்க கடத்தல் விவகாரத்தில், என்ஐஏ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது, கடந்தகால தங்கக் கடத்தல் வழக்குகளையும் அவர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயன். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்

முன்னதாக, கேரளாவிற்கு தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக உளவுத்தகவல் கிடைத்திருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பரபரப்பு தகவலை தெரிவித்தது. இது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி கேரள அரசியலில் புது பரபரப்பைக் கிளப்பியது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் மூலம் 30 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக கடத்த முயன்ற வழக்கில் சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் ஸ்வப்னா சுரேஷ் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முதல்வரின் தனிச் செயலாளரான சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது.
தற்போது தலைமறைவாகியிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, உபா (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு Unlawful Activities (Prevention) Act) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக் கூடாதென தேசிய புலனாய்வு அமைப்புத் தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத்தகவல் கிடைத்திருப்பதாகவும்; பயங்கரவாத கும்பலுக்கு நிதி உதவி செய்யவே தங்கக் கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்றும் உயர்நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல் தெரிவித்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது. மேலும், அன்றைய தினம் உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவை ஏற்க முடியுமா என ஆராயப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதனிடையேகேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசார் தன்னை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து கொண்டு மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் மூணாறு அருகே போதமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை நேற்று போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும் கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக கிராமம் ஒன்றில் ஸ்வப்னா சுரேஷ் பதுங்கி இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் தகவல் வைரலானது. திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள குமரி, தென்காசி மாவட்ட கிராமத்தில் தான் பர்தா அணிந்து அவர் பதுங்கியிருக்கிறார் என்று தகவல் வைரலானது.


