லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து, 600 மீட்டர் மட்டுமே பின்வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் அருகேயுள்ள லடாக் பகுதியில், இந்திய – சீன எல்லையில், சமீபத்தில் பதற்றம் நிலவியது. சீன ராணுவ வீரர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், சீன வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், சீன ராணுவம், இதை உறுதி செய்ய மறுக்கிறது. இதையடுத்து, எல்லையில் போர் பதற்றம் எழுந்த நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அமைதி பேச்சு நடத்தினர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சு நடத்தினார்.
இதில், பதற்றத்தை தவிர்க்க, இரு தரப்பும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து வாபஸ் பெறுவது என, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, லடாக் அருகில், சீன வீரர்களும், நம் வீரர்களும், தங்கள் நிலைகளில் இருந்து, 1.5 கி.மீ., பின்வாங்கிச் சென்றதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், இரு தரப்பும், லடாக் பகுதியிலிருந்து, 600 மீட்டர் வரை மட்டுமே பின்வாங்கிச் சென்றதாக, நேற்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லையில், இரு தரப்பு வீரர்களும் மிக அருகருகே நிற்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கல்வான், கோக்ரா உள்ளிட்ட இடங்களில், இரு தரப்பும், தற்காலிகமாக ரோந்து பணிகளை ஒத்தி வைத்துள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.