வெள்ளத்தினால் வீட்டின் சமையலறைக்குள் தஞ்சமடைந்த புலி!

Published:

tiger

அசாமில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்த வங்கப் புலியை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

அசாமில் பெய்த கன மழையால் கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசிரங்கா தேசிய பூங்காவை முற்றிலுமாக வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ளது. பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் ஏராளமான வனவிலங்குகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அப்படி மழை நீரில் அடித்து செல்லப்பட்ட வங்கப்புலி ஒன்று போரா என்பவரின் வீட்டின் சமையலறையில் தஞ்சமடைந்தது.

சமையலறையில் புலி இருப்பதை கண்ட போரா அதன் நிலை கண்டு பரிதாபமடைந்தார். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்த 11 பேரும் வெளியேற்றப்பட்டனர். பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் புலியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எதற்கும் அசைந்து கொடுக்காத புலி அதே இடத்தில் பிடிவாதமாக படுத்திருந்தது.

இரண்டாம் கட்ட முயற்சியாக மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க திட்டமிடப்பட்டது. எங்கும் நகராமல் ஒரே இடத்தில் புலி படுத்து கிடந்ததால் மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்கும் முயற்சி வெற்றியில் முடிந்தது. பாதுகாப்பாக மீட்கப்பட்ட வங்கப்புலி வனவிலங்குகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் உள்ளது.

காசிரங்கா பூங்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 66 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதில் 12 விலங்குகள் சாலையை கடக்கும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்தன. 3 வங்கப் புலிகள் உட்பட 170 விலங்குகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img