உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் சதவீதம் இந்தியாவில்தான் குறைவு. படிப்படியாக உயிரிழப்பு குறைந்துவந்து, முதல் முறையாக 2.50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்து 2.49 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்:
”இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, கொரோனாவில் 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்து 422 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். கொரோனாவில் 26 ஆயிரத்து 816 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு எடுத்துவரும் தீவிரமான தடுப்பு நடவடிக்கையால் கடந்த மே மாதத்திலிருந்து கொரோனாவில் உயிரிழப்பு சதவீதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மே 12-ம் தேதி 3.2 சதவீதம் இருந்த உயிரிழப்பு வீதம், ஜூன் 1-ம் தேதி 2.82 சதவீதமாகக் குறைந்தது.
ஜூலை 10-ம் தேதி இந்த சதவீதம் 2.72 சதவீதமாகவும், தற்போது உயிரிழப்பு சதவீதம் முதல் முறையாக 2.50 சதவீதத்துக்கும் கீழ் 2.49 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது உலக அளவில் கொரோனா இறப்பு வீதத்தில் மிகக் குறைவாகும்.
கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக்கும், குணமடைந்து செல்வோருக்கும் இடையே நாளுக்கு நாள் முன்னேற்றம் தென்படுகிறது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட, குணமடைந்து செல்வோர் எண்ணிக்கை ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் மேல் அதிகமாக இருக்கின்றனர்.
இதுவரை 6.77 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேசமயம், சிகிச்சை எடுத்துவரும் 3.73 லட்சம் பேரும் விரைவாக குணமடையும் வகையில் சிறப்புக் கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் 29 மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் கொரோனாவில் இறப்பு வீதம் என்பது தேசிய சராசரிக்கும் குறைவாகவே இருந்து வருகிறது, 5 மாநிலங்களில் இறப்பு வீதம் பூஜ்ஜியமாகவும், 14 மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.
மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கையான தனிமைப்படுத்துதல் நடவடிக்கை, தீவிரமான பரிசோதனை, தரமான சிகிச்சை, கவனிப்பு ஆகியவற்றால் இந்தியாவில் கொரோனாவில் உயிரிழப்பு 2.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மக்கள்தொகை அடிப்படையில் சர்வே செய்து ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை அடையாளம் கண்டு அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தனிப்பட்ட சிகிச்சையும், தடுப்பு நடவடிக்கையும் எடுத்து வருவதும் கொரோனா உயிரிழப்பு குறையக் காரணமாகும்.
அடிமட்ட அளவில் களப்பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களான ஆஷா பணியாளர்கள், ஏஎன்எம் பணியாளர்களின் கடினமான உழைப்பால் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது.
குறிப்பாக மணிப்பூர், சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், அந்தமான் நிகோபர் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு வீதம் பூஜ்ஜியமாக இருக்கிறது.
தேசிய சராசரியைக் காட்டிலும் திரிபுராவில் (0.19), அசாம் (0.23), கேரளா (0.43),ஒடிசா (0.51), கோவா (0.60), இமாச்சலப் பிரதேசம் (0.75), பிஹார் (0.83), தெலங்கானா (0.93) ஆகியவற்றில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உயிரிழப்பு வீதம் இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம்(1.31), தமிழகம் (1.45), சண்டிகர்(1.71), ராஜஸ்தான்(1.94), கர்நாடகா (2.08), உத்தரப் பிரதேசம் (2.36) சதவீதமாக இருக்கிறது”. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.