புதுதில்லி:
சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்.3 ஞாயிற்றுக் கிழமை நாளை சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
9-வது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் செப்.3 நாளை தொடங்கி 5ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்கிறார். சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மியன்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அண்மைக் காலத்தில் சீன நாட்டுடனான டோக்லாம் எல்லைப் பிரச்னை பூதாகாரமாக வெடித்து ஓய்ந்துள்ள நிலையில், மோடியின் இந்த பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின் போது சீன அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.