‘மிடில் பெர்த்’ சண்டைகளைத் தீர்க்க கட்டுப்பாடு: ரயில்ல இரவு 10 – 6 தான் தூங்க முடியும்!

Published:

புது தில்லி:

இந்தியாவில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடையே இரவு மற்றும் காலையில் நீண்ட நேரம் தூங்குவது தொடர்பாக அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, லோயர் மற்றும் மிடில் பெர்த் பயணிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதும் உண்டு. இத்தகைய சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவர, ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான பயணிகள் ரயிலில் பகல் அல்லது இரவு நேரம் என எப்போது ரயிலில் ஏறினாலும் உடனடியாகப் படுத்து தூங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் மற்ற பயணிகளுக்கு வசதிக்குறைவு ஏற்பட்டுவிடுகிறது. லோயர் பர்த்தில் உள்ள பயணி பயண நேரம் முழுவதும் தொடர்ந்து தூங்கினால் அப்பர், மிடில் பெர்த் பயணிகள், கீழே இறங்கி அமர்வதற்கான சூழல் இல்லாமல் போய் விடுகிறது.

இந்தப் பிரச்னை சைடு பெர்த்களில் அடிக்கடி ஏற்படும். சைடு அப்பர் பெர்த்தில் பயணிக்கும் நபருக்கு சைடு லோயர் பெர்த்தை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

இத்தகைய பிரச்னைகளைத் தீர்க்க, ரயில்களில் பயணிகள் தூங்குவதற்கான நேரத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரயில்களில் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்த பயணிகள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம் என்ற விதிமுறை தற்போது அமலில் இருந்தது. இது தற்போது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இனி தூங்க அனுமதி வழங்கப்படுகிறது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதர நேரத்தில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். நோயாளி பயணிகள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றவர்கள் கூடுதல் நேரம் தூங்க விருப்பப்பட்டால் அதற்கு அனுமதி உண்டு. இந்தப் புதிய உத்தரவு, முன்பதிவு செய்யப்படும் அனைத்து படுக்கை வசதி கொண்ட ரயில்களுக்கும் பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ”லோயர் பெர்த் மற்றும் மிடில் பெர்த்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த இரண்டு படுக்கைகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக நேரம் தூங்கிவிட்டால், விழித்திருக்கும் மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறு ஏற்படுகிறது. அதனால் அனுமதிக்கப்பட்ட தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால் டிக்கெட் பரிசோதகர்கள் தீர்த்து வைப்பார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img