சென்னை: அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் அனைத்து அரசுத்துறைகளிலும், அனைத்து நிலைகளிலும், இலஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. மக்கள் பணிகள் நடைபெறாமல் முடங்கிப் போய் உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற மத்திய அரசு நேரடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 07.01.2015 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு, தீர்மானம் நிறைவேற்றியது. தேமுதிகவின் குற்றச்சாட்டுகள் தற்போது உண்மையாகி வருவதாகவே தெரிகிறது. திருநெல்வேலி வேளாண்மைப் பொறியியல் துறையில் ஓட்டுனர் பணியிடங்களை நியமனம் செய்ததற்கு, அத்துறையின் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியிடம், இத்துறையின் அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இலஞ்சம் கேட்டதாகவும், கடுமையான சொற்களால் அவரை மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் நேர்மையான அதிகாரி என அப்பகுதியில் நற்பெயர் எடுத்த திருநெல்வேலி வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் அதிமுக கட்சி பதவியில் இருந்தும் வேளாண்மைத்துறை அமைச்சர் பதவியில் இருந்தும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கத்திற்கு வேளாண்மைத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த சி.பி.ஐ.விசாரணை நடத்தக்கோரி சில மாதங்களுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, ஈரோட்டில் உள்ள இடத்தை விற்பனை செய்வதில் வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர், வாரியத்தலைவர், மற்றும் துறையின் அமைச்சர் மீது புகார் எழுந்தது. வீடியோ ஆதாரங்களுடன் அந்த இடம் விற்பனை குறித்த சர்ச்சையில் சிக்கிய ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி தற்கொலை செய்துகொண்டார். இதில் சம்மந்தப்பட்டவர்கள் யார் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வீட்டு வசதித்துறையில் CMDA மூலம் கட்டிட அனுமதிக்கு சதுரடிக்கு ரூ.55 முதல் ரூ.100 வரையிலும் மற்றும் DTCP அனுமதிக்கு ஏக்கருக்கு ஏழு இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை இலஞ்சம் பெறப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இத்துறையின் அமைச்சருக்கே கூடுதல் பொறுப்பாக வேளாண்மைத்துறையையும் அளித்து இருப்பது வியப்பாக உள்ளது. அவருடைய துறையில் ஏற்கனவே உதவி செயற்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதில் எவ்விதபிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்குத்தான் இந்த கூடுதல் பொறுப்போ? இதுதான் அதற்குரிய தகுதியோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேட்டில் தொடர்புடைய அதிமுகவைச் சேர்ந்த வைத்தியநாதனுக்கும், அத்துறையின் அமைச்சராக இருந்த மாதவரம் வி.மூர்த்திக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லை அவர் நேர்மையானவர் என்றால், எதற்காக அவரிடம் இருந்த பால் வளத்துறை அமைச்சர் பதவி ஏன் பறிக்கப்பட்டது என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்றும் இருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் எதுவுமே யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. செய்தி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீது, 2011 சட்டமன்ற தேர்தலில் அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பிற்கும், தற்போது அவரிடம் உள்ள சொத்துக்களின் மதிப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என உயர்நீதிமன்றம் வரை இந்த அமைச்சர் மீது புகார் செய்யப்பட்டது.அதிமுக அரசின் ஒவ்வொரு அமைச்சர் மீதும் இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இதுகுறித்து கேட்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ விளக்கம் அளிக்க முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும் முன்வருவதில்லை, சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ வாயே திறப்பதில்லை. தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளார். தவறு செய்கின்ற அமைச்சர்களை தட்டிக்கேட்கும் திராணியும், நேர்மையும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வெளியே தெரிந்தபின்பும் அமைச்சர்கள் மீது இவர் ஏன் எவ்வித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை? அமைச்சர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் இவர் உள்ளாரா? வேறுஏதேனும் மறைமுக நிர்பந்தம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறதா? இந்த ஆட்சி இலஞ்சம், ஊழல், முறைகேடுகளற்ற ஆட்சி என்றால் சி.பி.ஐ.விசாரணைக்கு அதிமுக அரசை உட்படுத்தி, அதில் உள்ள உண்மைகளை பொதுமக்கள் அறியச்செய்ய வேண்டும். மேலும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும். அவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்தால் தான் இதில் உள்ள உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்பதையும் தமிழக மக்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்.
அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்: விஜயகாந்த்
Popular Categories


