லூதியானா: மகளிர் தினத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் இரண்டு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் மகளிர் தினத்தன்று அதிகாலை 1.15க்கு தோழி வீட்டுக்குச் சென்றுவிட்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை உள்ளே இழுத்துப் போட்டுச் சென்றது. காரில் வந்த நபர்கள் காரின் நம்பர் பிளேட்டை கருப்புத் துணியால் மறைத்து வைத்திருந்தனராம். அவர்கள் அந்தக் காரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். அங்கே அந்தப் பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு அவரை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காரை ஓட்டி வந்த நபர் அந்தப் பெண்ணைக் கடித்துள்ளார். பின்னர் அந்த நபர்கள் அவரை ஹாஸ்டல் அருகே கொண்டுவந்து விட்டு, செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்துக் கொண்டு அவரின் செல்போனை கீழே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதன் பின்னர், அந்தப் பெண்ணின் தோழிகள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து, போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீஸாரிடம் அந்தப் பெண் கூறுகையில், என்னைக் கடத்தியவர்கள் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தவர்கள் போன்று இந்தியில் பேசினர். முந்தைய நாள்தான் வேறொரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக பெருமையாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். எதிர்த்துப் போராடினால் நிர்பயா கதிதான் உனக்கும் என்று என்னை மிரட்டினர். அவர்கள் இருவரின் பெயர் மோனு, விக்கி என்று அவர்கள் பேசிக் கொண்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா குறித்த ஆவணப் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராடினால் நிர்பயா கதிதான் உனக்கும் என்று அந்த நபர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த கருத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராடினால் நிர்பயா கதிதான்!: ஸ்டார் ஹோட்டல் ஊழியரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த துயரம்
Popular Categories


