புது தில்லி: நாகாலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த ஃபரீத்கான் என்ற நபர், நாகா. பழங்குடி மக்களால் சிறையில் இருந்து இழுத்து வரப்பட்டு, அடித்தே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மக்களவையில் பேசப்பட்டது. இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறியதாக நாகாலாந்து மாநில அரசு மீது காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் இப்பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் கௌரவ் கோகாய், “பழங்குடியினப் பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட கான் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பது பற்றி நாகாலாந்து அரசு அறிக்கை வெளியிடவில்லை. அவர் நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது அவருக்கு விசாரணையை எதிர்கொள்ள உரிமை உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை பாதுகாக்க மத்திய பாதுகாப்பு படை தவறிவிட்டது” என்றார். வடகிழக்குப் பகுதி மக்கள் மீதான இனப் பாகுபாட்டை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. சுஷ்மித் தேவ் வலியுறுத்தினார்.

