புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் தொடர்பான வழக்குகளை பாலியல் பலாத்கார சட்ட வரம்பில் இருந்து நீக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ‘நாடு முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஆண்-பெண் இணையர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அத்தகைய நபர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படும் போது காவல் நிலையங்களில் 376-வது பிரிவின் கீழ் (பாலியல் பலாத்காரம்) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதை மாற்றி 420-வது பிரிவின் கீழ் (ஏமாற்றுதல்) மட்டுமே வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கேற்ப சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ரோஹினி, நீதிபதி ராஜீவ் சஹாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்…. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் இணையர் தொடர்பான வழக்குகளை 376-வது சட்ட வரம்பில் இருந்து நீக்கினால் அத்தகைய தம்பதியருக்கு சட்டபூர்வமான திருமண அங்கீகாரம் அளித்தது போலாகிவிடும். அதற்கு சட்டத்தில் இடமில்லை. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் வரும்போது ஆழ்ந்து ஆராய்ந்து விசாரிக்கப்படுகின்றன. இவ்வகையில் ஆண்கள் மீது தொடரப்பட்ட பலாத்கார வழக்குகளில் சுமார் 70 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மனுதாரர் கோரியபடி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் இணையர் தொடர்பான வழக்குகளை பாலியல் பலாத்கார சட்ட வரம்பில் இருந்து நீக்க முடியாது. – என்று கூறினர்.
மணமாகாமல் சேர்ந்து வாழ்பவர் வழக்குகள் பலாத்கார சட்டப் பிரிவிலேயே தொடரும்: தில்லி நீதிமன்றம்
Popular Categories


