
மத உணர்வுகளை காயப்படுத்தியதாக பிரபல பிரியாணி உணவகத்துக்கு எதிராக இந்து மத அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த Niyaz என்ற உணவகத்தை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அந்த உணவகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த விளம்பரம் இந்து மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அந்த சங்கிலித் தொடர் உணவகங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் மூடியுள்ளனர்.
பெங்களூருவில் Niyaz என்ற ஹோட்டல் நிறுவனம் பிரபலமாக விளங்கி வருகிறது. பெங்களூரு நகரம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது இந்த உணவகம். இந்த ஹோட்டல் அதனுடைய பிரியாணிக்காக பிரபலமானதாக விளங்குகிறது.
சமீபத்தில் Niyaz ஹோட்டல் சார்பில் அதனுடைய சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் போஸ்டர் பகிரப்பட்டிருந்தது. அதில் சாமியார் ஒருவர் தனது சீடர்களை பார்த்தவாறு அமர்ந்து, இந்த ஓட்டலின் பிரியாணியை ருசித்த பின்னர் எனக்காக தியாகம் எதுவும் செய்ய வேண்டாம் இந்த பிரியாணி தந்தால் போதும் என சொல்வதாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் இந்த விளம்பரம் படத்தை பகிர்ந்து எங்கள் பிரியாணி பிற பிரியாணிகளுக்கு அகம் பிரம்மாஸ்மி என சொல்கிறது என தெரிவித்துள்ளனர். அகம் பிரம்மாஸ்மி என்றால் நானே தெய்வீகமானவன் என அர்த்தம்.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. இந்து மத உணர்வுகளை காயப்படுத்தி ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் தயாரித்திருப்பதைக் கண்டித்து பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் பாஜகவினரும் இந்த விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட காவல்துறையினர் அந்த ஓட்டல் கிளைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக மூட உத்தரவிட்டு, பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தியுள்ளனர்.
இதனிடையே அந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கும் ஓட்டல் நிர்வாகம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதால் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.