புது தில்லி: நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் பணிகளுக்கு திரும்புவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன், தில்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கே சென்றார், எங்கே தங்கியுள்ளார் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், அதற்கு தடை ஏற்பட்டதால் அவர் கோபத்தில் வெளியேறியதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், அவரது விடுப்பு குறித்து காங்கிரஸ் கட்சியினரே, காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள் என்றெல்லாம் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதால் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ”ராகுல் காந்தி அரசியலை விட்டு போகவில்லை. அவர், புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காக, சில ஆழ்மனப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள வெளிநாடு சென்றுள்ளார்” என்றனர். இந்நிலையில், கட்சியில் சில மாறுதல்கள் செய்ய தடங்கல் ஏற்பட்டதால், ராகுல் காந்தி கோபத்தில் வெளியேறியதாக வெளியான தகவலை சோனியா காந்தி மறுத்தார். இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று தில்லி திரும்புவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் தில்லி திரும்புவது குறித்தோ, அல்லது அவர் தில்லி வந்தடைந்ததாகவோ எந்தவித தகவலும் இல்லை. இதனிடையே ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளதாகவும், இந்த வார இறுதியில் அவர் தில்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுப்பை நீட்டித்தார் ராகுல்: விரைவில் திரும்புவார் என்கிறது காங்கிரஸ்
Published:

