
ஐ.பி.எல் 13.10.2021 – இரண்டாவது எலிமினேட்டர் மேட்ச்
டெல்லி vs கொல்கொத்தா
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
ஷார்ஜாவில் இன்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திற்குச் செல்ல கொல்கொத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கொத்தா அணி முதலில் ஃபீல்ட் செய்யத் தீர்மானித்தது.
டெல்லி அணியின் அதிரடி ஆட்ட வீரர்களான ப்ருத்வீ ஷா (18), ஷிகர் தவண் (36), ஸ்டோயினிஸ் (18), ஷ்ரேயாஸ் ஐயர் (30) ரிஷப் பந்த் (6), ஹெட்மயர் (17) ஆகியோருள் அவரும் நிலைத்து ஆடி ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. இதனால் இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 135 ரன் என குறைவாகவே இலக்கு நிர்ணயித்தது.
பின்னர் ஆடவந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (46), வெங்கடேஷ் ஐயர் (55) இருவரும் மிக நன்றாக ஆடினர். பதினைந்து ஓவர்களுக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என அனைவரும் எண்ணியிருந்தபோது, இவர்கள் இருவரும் அவுட்டாயினர்.
பின்னர் தினேஷ் கார்த்திக், ஈயான் மார்கன், ஷாகிப்-அல்-ஹசன், சுனில் நாரயண், ஃபெர்கூஸன் ஆகியோர் வரிசையாக ரன் எடுக்காமல் அவுட்டாகினர். அதிலும் பதினெட்டாவது, பத்தொன்பதாவது ஓவரில் அவுட்டாகினர். இரண்டு பந்தில் ஆறு ரன் எடுக்க வேண்டிய நிலையில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ் அடித்து கொல்கொத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.
இனி வருகின்ற 15 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும். ஐ.பி.எல். 2021 இல் குரூப் விளையாட்டுகளில் இரு முறை இந்த இரண்டு அணிகளும் சந்தித்துள்ளன. இருமுறையும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கோப்பையை இது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு முறை ஃபைனலில் விளையாடியிருக்கிறது; மூன்று முறை வென்றிருக்கிறது. கொல்கொத்தா அணி இரண்டு முறை ஃபைனல் விளையாடியிருக்கிறது; இரண்டு முறையும் வென்றிருக்கிறது; அதி ஒருமுறை சென்னை அணியை வென்றிருக்கிறது.


