திமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் நாகா பழங்குடியின மக்களால் சிறைச்சாலையில் இருந்து கைதி இழுத்து வரப்பட்டு, சாலையில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதி குறித்த அறிக்கையில் தரப்பட்டுள்ள முரண்பட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள திமாபுர் சிறையில் பாலியல் பலாத்காரக் குற்றப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷெரிப் கான் என்ற நபரை பழங்குடியின மக்கள் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை கேட்டுக் கொண்டதை அடுத்து, உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்தது. அந்த அறிக்கையில், ஷெரிப் கான் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், புகார் கொடுத்த பெண்ணுடன் அவரது விருப்பத்தின் பேரிலேயே இருமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அந்தப் பெண் கூடுதலாகப் பணம் கேட்டு, தான் தர மறுத்ததால், பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த முரண்பட்ட தகவல், இந்தச் சம்பவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து கொலைச் சம்பவம்: அறிக்கையில் கைதி குறித்து முரண்பட்ட தகவல்
Published:

