புது தில்லி: மாநிலங்களவையில் எனக்கு எதிராக தீர்மானம் நிறவேற்றினால் மட்டும் போதாது; விசாரணையே இன்றி என்னை தூக்கில் போட எம்.பி.க்கள் முன்வரலாம் என்று மார்கண்டேய கட்ஜூ கேலியாகக் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் காந்தி பிரிட்டிஷ் ஏஜென்ட் என்றும், பசுவதையும் காந்தியும் என்பது குறித்தும் கட்டுரைகளை எழுதியிருந்தார். கட்ஜுவின் இந்தக் கருத்து, மாநிலங்களவையில் பெரும் அமளியைக் கிளப்பியது. கட்ஜூவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்துள்ள கட்ஜு, விசாரணை இன்றி தன்னை தூக்கில் போடலாம் என்று கூறினார். “இது அற்புதமான ஒரு செய்தி. மாநிலங்களவை எனக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது! சரிதான்… ஆனால் அது மட்டும் போதாது. நான் போலியாக தேசத்தந்தை என்று அழைக்கப்படும் ஒருவரைப் பற்றியும், ஜப்பானிய பாசிச சக்திகளின் ஏஜெண்ட் பற்றியும் கருத்து தெரிவித்ததற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வெறூம் கண்டனம் தண்டனை ஆகாது. நான் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றவன் என்பதால், எனது சலுகைகளைப் பறிக்க வேண்டும் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு விதிகளைத் திருத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டி இருக்கும். நான் வேண்டுமானால், எளிமையாக ஒன்றைச் செய்யலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், என்னைக் கைது செய்து, விசாரணையே இன்றி தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்” என்று கேலியாகக் கூறியுள்ளார்.
விசாரணை இன்றி என்னை தூக்கில் போடலாம்: எம்.பி.க்களுக்கு கட்ஜூ கிண்டல்
Popular Categories


