கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 71 வயது மூதாட்டியான கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கான்வெண்ட் பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளின் உருவங்களை போலீஸார் கண்டறிந்தனர். அவர்களை அடையாளும் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப் படும் 4 பேர் காவல் துரையினரால் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார், குற்றவாளிகள் குறித்த நம்பத்தகுந்த தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஆசிரமத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணியளவில் ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், புகுந்தது. அங்கிருந்த ஓர் ஆசிரியையை கட்டிப் போட்டு உள்ளே சென்று, தூங்கிக் கொண்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியை அந்த ஆசிரியையின் கண் முன்பே தாக்கியது. அவரது கழுத்தை நெரித்து அவரை கொடூரமான நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது. அந்த கன்னியாஸ்திரி மயங்கிய நிலையில் கிடந்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ. 10 லட்சத்தைக் கொள்ளயடித்து ஓடிவிட்டது. பின்னர் அந்த கன்னியாஸ்திரி நாடியா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். கோல்கத்தாவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம். காலையில் கான்வென்டுக்கு வந்த மற்றவர்கள் மூலம் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இது குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.
71 வயது கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிசிடிவி கேமரா உதவியில் 4 பேரைப் பிடித்து விசாரணை
Popular Categories


