பேஸ்புக்கில் போலி பெண் ஐடி.,யில் விமானப் படை கேப்டனிடம் அறிமுகமாகிப் பழகி, இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை பயங்கரவாதிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு பயங்கரவாதிகளிடம் ஆவணங்களைக் கொடுத்த கேப்டன் அருண் மார்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள இந்திய விமானப்படையின் தலைமை அலுவலகத்தில் தலைமை கேப்டனாக பணிபுரிபவர் அருண் மார்வா (51). இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து பெண்கள் இருவர் பேஸ்புக்கில் நட்பு அழைப்பு கொடுத்து இணைந்துள்ளனர். அவர்களுடன் மார்வா, தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆபாசமாகப் பேசி சேட் செய்துள்ளனர். மார்வாவும் அவர்களுடன் பேஸ்புக் சேட், வாட்ஸ் அப் சேட் உள்ளிட்டவற்றில் பேசியுள்ளார். இதனிடையே அவர்கள் இந்த சேட்களை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்து விமானப் படை குறித்த ரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழனன்று விமானப்படையின் ரகசிய கூட்ட அரங்கிற்கு கையில் ஸ்மார்ட் மொபைல் போனுடன் அருண் மார்வா வந்துள்ளார். ஆனால் கூட்டங்களுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக போன்களைக் கொண்டு செல்ல தடை உள்ளது. இதனால் அவரிடம் இருந்து காவலர்கள் மொபைல் போனை பறித்துக் கொண்டனர். பின்னர் அவற்றை ஆய்வு செய்ததில், மார்வா செய்த தகவல் பரிமாற்றங்கள் தெரியவந்தன. இதனை அடுத்து, உயர் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அருண் மார்வாவை கைது செய்த போலீசார் ஐந்து நாட்கள் தனியாக வைத்து விசாரணை நடத்தினர். இது விமானப் படை அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகாரிகள் செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் பல இருந்த போதிலும், அருண் மார்வா போன்றவர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ் இயக்க பயங்கரவாதிகள் இயங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.