டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரண உதவித்தொகையை அறிவித்துள்ளார்.
டெல்லி முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்
கட்டிடத்தில் இருந்து சுமார் 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், இது மிகவும் வருத்தமான சம்பவம். முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டு 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் (வெளி மாவட்டம்) சமீர் ஷர்மா கூறுகையில், “இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை அளவில் 4.40 மணி அளவில் ஏற்பட்தாக சொல்லப்படும் இந்த பயங்கர தீவிபத்தை சுமார் 24 தீயணைப்பு குழுவினர் போராடி அணைத்து வருகின்றனர். மூன்றடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் முழு தளத்திலும் இன்னும் முழுமையாக மீட்பு பணிகள் முடியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளின்அடிப்படையில், முதல் தளத்திலிருந்தே தீ பரவியிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் துயரமடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏற்பட்ட சோகமான தீ விபத்தில் உயிர் இழப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த சோகமான சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தீயணைப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். எங்களது துணிச்சலான தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றனர். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.









