ஓடும் ரயிலில் கழிப்பறையில் பிறந்த குழந்தை, கழிப்பறை ஓட்டை வழியே தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது. இந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பவுரி பல்பி (32) சூரத்காரில் இருந்து ஹனுமன்கருக்குய் ரயிலில் பயணம் செய்தார். உடன் அவரது கணவரும் தாயாரும் பயணித்தனர். ஹனுமன்கர் ரயில் நிலையத்துக்கு 13கி.மீ. தொலைவில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக ரயில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கே அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் மயக்க நிலையில் இருந்ததால் குழந்தை கழிப்பரை ஓட்டை வழியே தண்டவாளத்தினுள் விழுந்தது. உடன் வந்த தாயாரும் கணவரும் பெண் கழிவறைக்குள் இருப்பதாக எண்ணியிருந்தனர். ஆனால், ஹனுமன்கர் ரயில் நிலையம் வந்த பின்னரே நடந்தவை அனைத்தும் தெரியவந்தது. இதை அடுத்து, ரயில்வே போலீஸார் உதவியுடன் கழிவறையில் மயங்கிக் கிடந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபட்டார். கழிவறை ஓட்டை வழியாக விழுந்த சிசு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டது குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

