கேரளாவை திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தங்கநகை வர்த்தகம் செய்துவரும் ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது பிரபல தங்க நகைக் கடையான ஜாய் ஆலுக்காஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் உள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், அதன் ரூ. 2,300 கோடி ஆரம்ப பொதுப் பங்கு எனப்படும் ஐபிஓவை திரும்பப் பெற்றுள்ளது.
நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்பதால் ஐபிஓவை திரும்பப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஐபிஓவின் வருமானத்தை வைத்து கடனைச் செலுத்துவதற்கும், எட்டு புதிய ஷோரூம்களைத் திறப்பதற்கும், பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 5 நாட்களில், அதாவது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில், கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைமையகம் மற்றும் திருச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் வர்கீஸின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறி, இந்தியாவில் இருந்து ஹவாலா (சட்டவிரோத பணப் பரிமாற்றம்) சேனல்கள் மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணம் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸுக்கு சொந்தமாக துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
மேலும், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து, நேற்று ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை தி நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை நடந்த போது கடைக்குள் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு, விற்பனை விவர கணக்குகளில் முறைகேடு புகார் வந்ததை தொடர்ந்து சென்னை, கேரளா உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.