கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மும்பையில் உள்ள அலுவலகத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கையகப் படுத்தியது. வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வசூலிப்பதற்காக இந்த நடவடிக்கையை வங்கி எடுத்துள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களிடம் வங்கிகள் இனியும் தயவு, தாட்சண்யம் காட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மும்பையில் மிகவும் முக்கியமான பகுதியில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்தக் கட்டடம் அதன் நிறுவனர் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது. அது இப்போது எஸ்பிஐ வசமாகியுள்ளது. இந்தக் கட்டடம் மொத்தம் 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பிரதான அலுவலகங்கள் சில இயங்கி வந்தன. இந்த அலுவலகத்தை ஜப்தி செய்யலாம் என மும்பை தலைமை மெட்ரோபாலிடன் நீதிபதி அளித்த உத்தரவின் அடிப்படையில் எஸ்பிஐ நேற்று முன்தினம் இந்தக் கட்டடத்தைக் கையகப்படுத்தியது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடி கடன் நிலுவை வைத்துள்ளது. இந்தக் கட்டடத்தைக் கைப்பற்றியதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 2 ஆயிரம் கோடியாவது கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

