துபையில் ஒரு லிஃப்டுக்குள் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 17ஆம் தேதி துபை பகுதியில் உள்ள ஓர் அலுவலக வளாக லிஃப்ட்டினுள் ஏறியுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர். அப்போது லிப்டினுள் இருந்த ஒரு பெண், நலம் விசாரிப்பதுபோல் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். பிறகு திடீரென்று அந்த இளைஞரை நெருங்கி வந்து கட்டிப்பிடித்துள்ளார். லிஃப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், இளைஞரின் சட்டையைப் பிடித்து உள்ளேயே இழுத்துள்ளார். பிறகு, ஏழாவது மாடிக்குச் செல்லும்படி பட்டனை அழுத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞரை பலவந்தமாகக் கட்டியணைத்து அந்த இளைஞரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் லிஃப்ட் 7ஆவது மாடியை அடைந்துள்ளது. அந்தப் பெண் மீண்டும் நான்காவது மாடிக்குச் செல்லும் பட்டனை அழுத்தியுள்ளார். அப்போது லிப்ட் 4ஆவது மாடியில் நின்றிருக்கிறது. அப்போதுதான் அந்த இளைஞர் அவளிடம் இருந்து விடுபட்டு தப்பியுள்ளார். ஆனால், வெளியே வந்து பாக்கெட்டைத் தடவியபோது, அதிலிருந்த பர்ச்சில் வைத்திருந்த 4500 திர்ஹமை (இந்திய மதிப்புக்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய்) எடுத்துச் சென்றுள்ளார் அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது. புகாரின்பேரில் அந்த ஜோர்டான் நாட்டுப் பெண் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். அந்த விசாரணையின்போது அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். ”நான் கடவுளுக்கு பயந்து நடப்பவள். எந்தத் தவறையும் செய்யவில்லை” என தெரிவித்தார். ஆனால், போலீஸார் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில், அந்த இளைஞரை அந்தப் பெண் லிப்ட்டினுள் இழுத்துப் போடுவதும், அந்த இளைஞர் வெளியே தப்பித்து ஓடிவர முயற்சி செய்ததும் அந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

