“சங்கரநாராயணன்” (பெரியவாளின் பொருத்தம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒரே விதமான இலக்கிய மரபின் அடிப்படையில்
பிறந்த திருப்பாவை-திருவெம்பாவையைக் கொண்டு
சைவ,வைணவச் சழக்கு நீங்கி அவை இசையச்
செய்தவர் ஸ்ரீ பெரியவாள். அர்த்தநாரீச்வரர் போல்,
திருவெம்பாவைக்குரிய ஈசனும்,திருப்பாவைக்குரிய
கண்ணனும் ஒரே மூர்த்தியில் பாதிப்பாதியாக இணைந்த
சங்கரநாராயணனாயிருப்பதை வலியுறுத்துவார்.
இவர்கள் ரூபத்தில் பாதிப் பாதியாகச் சேர்ந்திருப்பவர்கள்
என்பது முன்பே பலர் சொன்னதுதான். காலத்திலும்
அப்படியே இவர்கள் ஆளுக்கொரு பாதியாக இருப்பதாக
நமக்குப் பொருத்தம் காட்டியிருப்பது பெரியவாள்தான்.
(பெரியவாளின் பொருத்தம்)
“ஒரு வருஷத்தை இரண்டாக்கிக் கொண்டால் ஒரு பாதி கண்ணன், மறுபாதி ஈச்வரன். அந்த இரண்டு
பேருக்கே ஜகத்குரு பிருதம் உண்டு. “கறுப்புக் கண்ணன் தேவர்களுக்கு ராத்திரியான
தக்ஷிணாயணத்தில் அவதாரம். ஜ்யோதிர்லிங்கமோ
அவர்களுக்குப் பகலான உத்தராயணத்தில் உத்பவம்.
கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமிக்கும் லிங்கம்
உத்பவித்த சிவராத்திரிக்கும் இடையே சரியாக 180 நாட்கள்
இருக்கும்” என்ற அரிய விஷயத்தை அவர் சொல்லித்தானே
நாம் அறிகிறோம்? சந்தேகமிருந்தால் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு
பாருங்கள். ‘அதிக மாஸம்’ என்பது இல்லாத மற்ற எல்லா
ஆண்டுகளிலும் அப்படித்தானிருக்கும்.


