நேரடி கேஸ் மானியத்தால் கோடிக் கணக்கில் ரூபாய் மிச்சம்: பிரதமர் மோடி

Published:

narendramodi புதுதில்லி: நேரடி சமையல் எரிவாயு மானியத் திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  தில்லியில் நேற்று நாஸ்காம் அமைப்பின் 25வது ஆண்டு – வணிக பொருளாதார ஆய்வரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில் நுட்பம் மூலம் சுற்றுலா மேம்பாட்டுக்கு வகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், ஐ.டி., பிரிவினர் மொபைல் ஆப்களை தயாரிக்கவேண்டும் என்றும், கம்ப்யூட்டர் தொடர்பான இணையக் குற்றங்களைத் தடுக்க இது அவசியம் என்றும் கூறினார். “நான் சந்தித்த பெரும்பாலான உலகத் தலைவர்கள், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்கள் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்திய இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மொபைல்போன் பயன்படுத்தவே எல்லோரும் அஞ்சுவார்கள் என்று கூறினார் மோடி. மேலும்,  சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் பயனால், உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்றடைவது சாத்தியம் ஆகியுள்ளது.  இத்திட்டத்தால், வேறு பயன்பாட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருப்பி விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனது கணக்குப்படி, 10 சதவீத முறைகேடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது… என்றார் மோடி. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தவுடன், மூன்றே மாதங்களில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரிச் சுரங்கங்கள், ஒளிவுமறைவின்றி மின்னணு ஏல முறையில் விற்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 204 சுரங்கங்களில் 19 சுரங்கங்கள் மட்டுமே இப்போதுவரை ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியபோது, நாங்களும் அதை அரசியலுக்காக பேசி வந்தோம். ஆனால், அந்தத் தொகையை எங்களால் நம்ப முடியவில்லை. ஆனால், 10 சதவீத நிலக்கரி சுரங்கங்களுக்கே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்த பிறகுதான், எல்லா சந்தேகங்களும் தீர்ந்துள்ளது. குட்டையை மட்டுமே பார்த்தவர்களுக்கு கடலின் அளவை கற்பனை செய்ய முடியாதுதான்.

  • என்று பிரதமர் மோடி பேசினார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img