
ஜிஎஸ்டி., தொடர்பான மோசடிப் புகார்களை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி.,யின் முழு அமைப்பையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், இனி ஜிஎஸ்டி., தொடர்பான தகவல்கள் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி பகிரப்படலாம்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றுடன் தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் ஜிஎஸ்டி., நெட்வொர்க்கையும் மத்திய அரசு இணைத்துள்ளது.
தற்போது, ஜிஎஸ்டி நெட்வொர்க் அரசியலமைப்புச் சட்டத்தின் 66வது பிரிவல் உள்ள பட்டியலில் 26 வது அமைப்பாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப்பிரிவு அமைப்புகளின் விசாரணைக்கு தேவைப்பட்டால், ஜிஎஸ்டி., நெட்வொர்க் அந்தத் தகவல்களை அவர்களிடம் அளிக்க வேவண்டும்.
இதன் மூலம், ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர்கள் ஏதேனும் சந்தேகத்துக்கு உரிய அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களைப் பற்றிய தகவல்களை ஜிஎஸ்டி., நெட்வொர்க் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப்பிரிவுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இவ்வகையில், அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப்பிரிவு போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு ஜிஎஸ்டி., குறித்த முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.