![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2023/08/gst-collection.jpg?resize=696%2C392&ssl=1)
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.65 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது 2022-ஆம் ஆண்டு ஜூலை மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியைக் கடப்பது இது 5-வது முறை.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதன்படி, மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக(சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக(எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோடியும் , ஒருங்கிணைந்த சரக்கு சேவ வரியாக(ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.