கடன் வழங்கும் ‘சீன’ செயலிகள்: மாட்டிக்காதீங்க மக்களே!

Published:

cellphone in hall - 2026

இந்நாட்களில், கடன் கிடைப்பது சுலபம், அதை அடைப்பது கடினம் என்றாகி விட்டது. இணையத்தில் ‘கடன்’ குறித்து நீங்கள் ஏதாவது தேடினால் கூட, உங்களுக்கு தொடர்ச்சியாக கடன் வழங்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள், செல்போன் மூலம் விடாமல் ‘கால்’ செய்து, “கடன் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று உயிரெடுப்பார்கள். இவற்றில் எல்லாம் மயங்கி கடன் வாங்கிக் கொண்டால், அதன் பின் படும் பாடு திண்டாட்டம்தான்! 

இது தனிநபர் படும் திண்டாட்டம் என்று நாம் கவலைப்படுவதை விட, இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் சர்வதேச சதி, குறிப்பாக சீனாவின் சதிவலை இருப்பதை நினைத்தே அதிக கவலை ஏற்படுகிறது. நம் நாட்டின் பொருளாதாரத்தை, ஒரு புறம் பாகிஸ்தான், கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, சீரழித்து  வந்தது. பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த ரூ 500, ரூ.1000 உயர் நோட்டுகள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், இப்போது பாகிஸ்தான் வழியே நம் நாட்டிற்குள் வரும் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. 

ஆனால் இன்னொரு அச்சுறுத்தலாக சீனாவின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் சுரண்டப்பட்டு வருவது, தேசத்தை நேசிப்பவர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சீனா எந்த விதத்தில் எல்லாம் நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து சுரண்டி கொழுக்கிறது என்பது,  நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. காரணம் இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு மொபைல் போன்கள்,  மின்னணு சாதனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு புழக்கத்தில் இருப்பவை.  அவை பல நேரங்களில் சீனாவின் உளவு சாதனங்களாக இருந்து விடுவது அதிர்ச்சிகரமான உண்மை. 

அண்மைய செய்தி ஒன்று, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணம் அனுப்பப்பட்டதாக சீன தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதும், கடந்தாண்டு, இந்த நிறுவனங்களில் நடத்திய சோதனையில், இந்தியாவில் வரி கட்டுவதை தவிர்க்க விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ.62,476 கோடியை சட்ட விரோதமாக அனுப்பியதாக அமலாக்கத்துறை கூறியிருந்ததும் நம் கவனத்தை ஈர்த்திருக்கக் கூடும். 

ஒருபுறம் வரி ஏய்ப்பு மூலம் பாரதத்தின் வளத்தை சீனா கடத்திக் கொண்டு செல்கிறதென்றால், மறு புறம், விளையாட்டு கேம் செயலிகள், கடன் வழங்கும் செயலிகள் இவை மூலமாக, பாரத நாட்டு நடுத்தர ஏழைக் குடிமகனின் சிறுக சிறுக சேமிக்கும் செல்வத்தையும் சீனா, ஏதோ வழிகளில் தன் நாட்டுக்கு கொண்டு செல்கிறது. பாரத அரசும் அதனால் தான்  அபாயகரமான சீன செயலிகளை  நம் நாட்டுக்குள் செயல்பட அனுமதிக்காமல் தடை கொண்டு வந்தது. 

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அரசு சார்பில் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் தங்களுக்கென வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டெலகிராம் கணக்குகளைக் கொண்டுள்ளன. அவர்களது சமூகத் தளப் பக்கங்களை அதிகமானோர் பின்தொடரவும் செய்கின்றனர். 

அண்மையில் மகாதேவ் ஆன்லைன் சட்டவிரோத சூதாட்ட செயலி சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைய வழி வகுத்ததை நாம் அறிவோம்.   வெட்ட வெட்ட வளரும் விஷ மரங்களைப் போல வளர்ந்து கிளை பரப்பிக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள்! இப்படி சூதாட்ட இணையதளங்கள், கேமிங் ஆப்கள், கடன் செயலிகள், முக்கியமாக சீன தயாரிப்பு ஸ்மார்ட் ஃபோன்களிடம் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருந்து கொள்வது, நமக்கும் நாட்டுக்கும் நற்பயனைத் தரும்!

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வந்த ஒரு செய்தியை நாம் புரிந்து கொண்டால், வருடத்தின் முடிவில் நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பார்வையை நாம் பலப்படுத்தலாம். ரூ.300 கோடி மோசடியில், 15 போலி சீன ஆப்கள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகின்றன என்றும், அவை குறித்த எச்சரிக்கையையும் அரசு வெளியிட்டது. இவ்வகையில், சுமார் 600 சீன லோன் ஆப்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதாகக் கூறி, அழைப்புகளை விடுத்து மக்களைச் சுரண்டிய, 15 போலி சீன ஆப்ஸ் மூலம் ₹ 300 கோடி மோசடி செய்ததை, உத்தரகாண்ட் காவல்துறை சைபர் பிரிவு கண்டறிந்து, குற்றவாளிகளின் கூட்டுக் கொள்ளையை தடுத்தது.

இது நடந்த விதமும் நாம் அனுதினம் சந்திப்பது போல்தான்! “சைபர் குண்டர்கள்” இந்த செயலிகளால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பங்களுக்கு ஆபாசமான படங்களை அனுப்புவதன் மூலம் அச்சுறுத்துவார்கள், அதை அவர்கள் தொலைதூரத்தில் தங்கள் தொலைபேசிகளை இயக்கி, பதிவிறக்கம் செய்வார்கள்.

“உத்தரகாண்ட் காவல்துறை ஒரு கூட்டுச் சதியை முறியடித்தது. அங்கு சைபர் குண்டர்கள் மக்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள், அவர்களின் மொபைல் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து, குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவார்கள். இந்த செயல்பாட்டில், அவர்கள் தங்கள் புகைப்படத் தொகுப்பு மற்றும் ஆவணங்களை அணுகலாம். மிரட்டி பணம் பறிப்பதற்காக அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்” என்றார் உத்தராகண்ட் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்தார்.

அதாவது இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்வதென்றால், உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகச் சொல்லி, உங்கள் விவரங்களைக் கேட்பார்கள். பின்னர் ஒரு செயலியை அனுப்பி அதனை நிறுவச் செய்வார்கள். அதன் மூலம் நீங்கள் கடன் குறித்த விவரங்களை அப்டேட் செய்வதற்காக என்பார்கள். ஆனால், அந்த செயலி உங்கள் மொபைல் போனின் அனைத்து வித தகவல்களையும் திருடும். அதில் உள்ள புகைப்படங்கள், குறிஞ்செய்திகள் அனைத்தும். பின் உங்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, வலையில் விழ வைத்து, மிரட்டிப் பணம் பறிப்பார்கள். இது ஒரு வகை.

இவ்வாறு செயல்பட்ட ஹெக்டர் லெண்ட்காரோ பிரைவேட் லிமிடெட் என்ற ஷெல் நிறுவனத்தைத் தொடங்கிய தில்லியைச் சேர்ந்த அங்கூர் திங்ரா உத்தராகண்ட் காவல்துறையால் இந்த வருட தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்த ஷெல் நிறுவனம், சீன லோன் ஆப்ஸ் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வந்தது; ரூபாகோ, ரூபாய் ஹியர், லோன்யூ, குயிக்ரூபே, பஞ்ச் மணி, கிராண்ட் லோன், டிரீம்லோன், கேஷ்எம்ஓ, ரூபே எம்ஓ, கிரெடிட்லோன், லென்ட்கார், ராக்ஆன், ஹோப்லோன், லெண்ட் நவ், கேஷ்ஃபுல் இப்படி பல பெயர்களில் இந்த ஆப்கள் இயங்கின. இந்த லோன் ஆப்-கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இதை அடுத்து, வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களை அடிக்கடி குறிவைக்கும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அமலாக்க நிறுவனங்களை பாரத அரசு கேட்டுக் கொண்டது.

இவ்வாறு கடன் செயலிகள் வழங்கும் கடன்களைப் பெறும் பலரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்து கொள்வதில்லை. அதிக வட்டி விகிதங்களைப் பற்றி அறிந்திருப்பதில்லை. சீன கடன் செயலி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கடன்களை வசூலிக்க சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன. அந்த நிறுவனங்கள் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தொடர்புகள் உட்பட ஒரு பயனரின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகின்றன. அதனை வைத்து, பணம் செலுத்த அவர்களை கட்டாயப்படுத்துகின்றன.

கடன் வாங்கியவர்களின் தொடர்பில் உள்ளவர்களையும் அழைத்து அச்சுறுத்துகின்றனர். அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக எஃப்ஐஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து அவற்றின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு எவ்வளவுதான் முயன்றாலும், புதிது புதிதாக முளைக்கும் செயலிகள் அப்பாவி மக்களை ஏமாற்றவே செய்கின்றன. இதைத் தடுக்க ஒரே வழி, நாம் எச்சரிக்கையாக இருப்பதே!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img