பெங்களுர்:
கர்நாடகாவில் தேர்தல் நெருங்குகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வருடம் தன் வீட்டின் முன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் திடீரென ஹிந்து யுவ சேன பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ( வயது 55) கடந்த 2017 செப்டம்பரில் மர்ம நபர்களால் அவர் வீட்டின் முன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். நக்சலைட்களுக்கு ஆதரவாளராக அறியப் பட்ட கௌரி லங்கேஷ் கொலையில் உடனடியாக துப்பு எதுவும் துலங்கவில்லை. இருப்பினும், அவர் ஹிந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டு, எழுதி வந்ததால், அவர் கொலையில் ஹிந்து அமைப்பினர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது. ஆனால், நக்சல்களை தனது டிவிட்டர் பதிவில் அவர் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன வேறுபாட்டில் இக்கொலை நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் கௌரி லங்கேஷின் சகோதரர் கூறியிருந்தார்.
இப்படி ஒட்டு மொத்த குழப்பங்களை ஏற்படுத்தி வழக்கில் துப்பு எதுவும் துலங்காத நிலையில், கர்நாடக சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.18ஆம் தேதி மாண்டியாவின் மதூர் என்ற பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதில், கைது செய்யப்பட்ட அந்த நபர் ஹிந்து யுவ சேனா அமைப்பைச் சேர்ந்த நவீன் குமார் (37) என்றும், அவருக்கு கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாகவும் விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.
இதன் மூலம் இந்த வழக்கின் திடீர் திருப்பமாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புள்ளவராகக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
தேர்தல் வரும் நேரத்தில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது என சர்ச்சைகளும் எழுந்துள்ளன.