திரிபுரா முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப் வெள்ளிக்கிழமை இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த கால் நூற்றாண்டாக திரிபுரா மாநிலத்தை தன் வசம் வைத்திருந்த இடதுசாரிகளை வெளியேற்றி, பாஜக., முதன்முதலாக வெற்றி பெற்று, திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக., சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டார்.
48 வயதாகும் பிப்லப் குமார் தேப், திரிபுராவின் கொமோடி நகரைச் சேர்ந்தவர். பிஏ., பட்டம் பெற்றுள்ள பிப்லப், திரிபுரா மாநில பாஜக., தலைவராக 2016 ஜனவரியில் பொறுப்பேற்றார். மிகச் சிறிய வயதில், கட்சியின் சார்பில் மாநிலத் தலைவரான பெருமையைப் பெற்றார். வேறு எந்த மாநிலத்திலும், பாஜக.,வின் மாநிலத் தலைவர்கள் இவ்வளவு சிறு வயதில் பொறுப்பேற்றுக் கொண்டதில்லையாம். தலைமைப் பொறுப்பில் வந்ததும், உடனே ஐபிஎஃப்டி.,யுடன் கூட்டணியைப் பேசி முடித்தார். தொடர்ந்து, பாஜக., சார்பில் அகர்தலாவில் இருந்து 2018 தேர்தலில் வென்று இப்போது மாநிலத்தில் 10ஆவது முதல்வர் ஆகியிருக்கிறார்.
அகர்தலாவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜிஸ்ணு தேப் பர்மன் துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி, முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிப்பதாக, எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. அதற்குக் காரணமாக, அண்மையில் நடைபெற்ற வன்முறைகளைக் குறிப்பிட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் அழைத்ததின் பேரில், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.