புதுதில்லி : தமிழகத்தில் உள்ள 9 கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அங்கீகாரம் கொடுக்கப் பட்டுள்ளது.
சிறப்பாகச் செயல்பட்டு வரும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னை அண்ணா பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை ராமச்சந்திரா மருத்துவப் பல்கலை, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை, சென்னை எஸ்ஆர்எம் பல்கலை, வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கோவை அம்ரிதா விஸ்வ மகா வித்யா பீடம், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கழகம், சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தன்னாட்சிக்குரிய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள், மனித வள மேம்பாடு படிப்புக்கள், புதிய ஆராய்ச்சிப் படிப்புக்கள் உள்ளிட்ட புதிய துறைகள் சார்ந்து படிப்புக்களைத் துவங்கலாம். மேலும், இப் படிப்புகளை வெளிநாட்டு தரத்தில் வழங்கவும் அனுமதி வழங்கப்படும். அஞ்சல் வழிக் கல்வி உள்ளிட்டவை குறித்தும் இவற்றுக்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு. இதனை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.