பெங்களூரு: சினிமா கிளைமாக்ஸ் சீனில் வருவது போல், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் இருவரை பெங்களூரு போலீசார், காரில் தப்பியோடியவர்களை விரட்டிப் பிடித்து, சுட்டு காயப்படுத்தி, பின்னர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பெல்லந்தூர் அருகே சர்ஜாபுரா ரோட்டில் வசித்து வரும் 28 வயதுப் பெண்ணை கடந்த 18ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் காரில் கடத்தினர். அதனை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல் துறைக் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணை காரில் கடத்திய அந்த நபர்கள் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு கசவனஹள்ளியில் காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். மயக்கத்தில் கிடந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப் பெண் பெங்களூரு பெல்லந்தூர் போலீசாரிடம் கூற, போலீஸார் அவர் கூறிய அடையாளங்களை வைத்து காரைத் தேடினர். விசாரணையில் கடத்தலுக்கு பயன்பட்ட காரை தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தி வருவது தெரிந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்கள் அதே காரில் பெல்லந்தூர் அருகே சுற்றுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து, பெல்லந்தூர் பகுதியில் காடுசித்தராபுரா செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று நிற்காமல் தடுப்பு வேலியை இடித்துத் தள்ளி ச் சென்றுள்ளது. போலீசார் அந்த காரைத் துரத்திய போலீஸார், குடத்திக்கேட் பகுதியில் மடக்கியுள்ளனர்.
காரில் இருந்து தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டினர். அப்போது போலீஸ்காரர் மகாந்தேஷ் முலவாடி அவர்களைப் பிடிக்க முயன்றார். அப்போது அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார் ஒருவர். இன்னொரு நபரும் அடுத்த போலீஸ்காரரை கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் விக்டர் சைமன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை சரண் அடைந்துவிடுமாறு கூறினார்.
ஆனால் இருவரும் தப்பி ஓடிவே போலீஸார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகள் 2 மர்ம நபர்களின் கால்களிலும் பாய்ந்ததில் இருவரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பின் இருவரையும் கைது செய்த போலீஸார், விசாரணையில், அவர்கள் தர்மபுரியை சேர்ந்த சங்கர்(வயது 25), செல்வகுமார்(26) என்பதும், பெங்களூரு பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதை அடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.