
ஜியோவின் அதிரடி சலுகையாக, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை வழங்குகிறது ஜியோ நிறுவனம்!
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஓர் ஆண்டுக்கு, ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஓர் ஆண்டுக்கு அதன் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய செல்பேசி சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 4ஜி சேவையை அறிமுகப் படுத்தியது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவில் அதிக டேட்டா, கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் வழங்கி மக்களை ஈர்த்தது ஜியோ.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை தொடங்கியது. அதில் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி பலரும் இணைந்தனர். அப்படி இணைந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடு முழுவதும் இலவச ரோமிங், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி 4 ஜி டேட்டா, எஸ்எம்எஸ் என அளிக்கப்பட்டன.
தற்போது, பிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பது குறித்து வாடிக்கையாளர்கள் ஐயங்களை எழுப்பினர். இதை அடுத்து, ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஓர் ஆண்டு சேவை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்த சலுகை வரும் 31-ஆம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கெனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31ஆம் தேதிக்குப் பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதை அடுத்து, பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் என்று அந்நிறுவனம் தெளிவாக்கியுள்ளது.



