பீடா கடை வெச்சாவது பொழச்சிக்கோங்க; அரசு வேலைன்னு சுத்தாதீங்க: சர்ச்சை ஆக்கப்பட்ட திரிபுரா முதல்வரின் அறிவுரை

Published:

biplab deb tripura cm - 2026

படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலையாமல் சுய தொழில் செய்யுங்கள், இல்லையெனில் கால்நடை துறையில் களமிறங்குங்கள் அல்லது வெற்றிலை பீடா கடையாவது தொடங்கி நடத்துங்கள்’ என்று திரிபுரா முதல்வர் பிப்லவ தேவ் தெரிவித்த கருத்து சர்ச்சை ஆக்கப் பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் பாஜக.,வைச் சேர்ந்தவர்கள் எதைப் பேசினாலும் அதை சர்ச்சை ஆக்கி விமர்சனம் செய்வது இப்போது ஊடகங்களில் பொழுது போக்கு அம்சம் ஆகிவிட்டது. அந்த வரிசையில் இப்போது ஊடகங்களிடம் சிக்கியிருப்பவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ்.

சில தினங்களுக்கு முன்னர், டயானா அழகு அல்ல என்றார். ஐஸ்வர்யா ராய் அழகு என்றார். சர்வதேச அழகு சாதனப் பொருள் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை வியாபாரம் செய்வதற்காகவும் சந்தையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இந்திய அழகிகளை உலக அழகிப் பட்டத்துக்கு தேர்வு செய்கின்றன என்று ஊடகங்களில் பலர் எழுதும் போதும் பேசும் போதும் கவனித்து, அதே கருத்தை திரிபுரா முதல்வரும் பேசியபோது, அது ஊடகங்களில் சர்ச்சைக்குரியதானது.  இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவவும் செய்தது.

இந்நிலையில், நேற்று திரிபுரா கால்நடைத்துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசினார் பிப்லப் தேவ். அப்போது அவர், ‘படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைக்காகக் காத்திருக்காதீர்கள். அரசு வேலை வேண்டும் என்று அரசியல்வாதிகள் பின்னால் அலையாதீர்கள். சுய தொழில் தொடங்க முயற்சி செய்யுங்கள். வங்கியில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். இல்லாவிட்டால் வெற்றிலை பீடா கடை தொடங்குங்கள்’ என்று இளைஞர்களுக்கு யோசனை கூறியுள்ளார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

அவர் தெரிவித்த யோசனையைத்தான் சினிமாக்களிலும் ஊடகங்களிலும் பலரும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சுய தொழில் தொடங்கி இளைஞர்கள் சொந்தக் காலில் நிற்கப்பழக வேண்டும் என்று ஊடகங்களில் சொல்லப் படும் அறிவுரையானது, ஒரு முதல்வரால் சொல்லப் படும் போது அதே ஊடகங்களில் இளைஞர்களை மாடு மேய்க்கச் சொல்கிறார் ஒரு முதலமைச்சர் என்று சர்ச்சையாக்கப்படும் என்பது பிப்லப் குமார் தேவுக்கு தெரியாமல் போயுள்ளது.

தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள்., மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஆட்சிப் பணிக்கு சரி வர மாட்டார்கள். சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்குத்தான் சமூகத்தை கட்டமைக்கும் திறன் இருக்கிறது’ என்று தெரிவித்தார். இந்தக் கருத்தும் பெரிய அளவில் சர்ச்சையாக்கப் பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img