கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ என அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இந்திய வம்சாவளிப் பெண்.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதம், அமெரிக்க அரசால் ஆசிய, அமெரிக்க, பசிபிக் பாரம்பரிய மாதம் என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த பிரகடன நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமெரிக அதிபர் டிரம்ப், விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை அமெரிக்க ஹீரோ என புகழ்ந்தார்.
அப்போது பேசிய அவர், ”இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மற்றும் குழு பயணம் என விண்வெளித் துறைக்கு பணிகள் பல ஆற்றியுள்ளார். ஒரு நாள் தாமும் விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என கனவு காணும் அமெரிக்கப் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் தைரியமும், ஆர்வமும் உத்வேகம் அளிக்கும். அவரது மறைவுக்கு பின்னர் நாசா விண்வெளி ஆய்வு மையம் அவருக்கு விண்வெளி மற்றும் சேவை பதக்கங்களை அளித்து கெளரவித்தது. இத்தகைய சாதனைகள் புரிந்த கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ” என புகழ்ந்தார்.
கல்பனா சாவ்லா கடந்த 2003 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக 7பேர் கொண்ட குழுவுடன் கொலம்பியா விண்கலத்தில் பயணமானார். ஆனால் கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பும் முன் வெடித்துச் சிதறி உயிரிழந்தார். விண்வெளி சாதனையாள பெண்களின் ரோல் மாடலாக கல்பனா சாவ்லா திகழ்ந்தார்.