பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில், சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டு, அதனை வெளியில் பகிரங்கப் படுத்தி விளம்பரம் செய்ததால், மானத்துக்கு அஞ்சிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இப்போது பெரும் பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போதுதான் இது மீண்டும் தூசு தட்டி எடுக்கப் பட்டுள்ளது. அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி, கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாவ மன்னிப்பு – இப்போது பெரும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மனம் உருகி கடவுளிடம் பிரார்த்தனை செய்து, தனது தவறுகளை மன்னித்து தன்னை நேராக்குமாறு கோருவது, ஆன்மிக நிலையில் திகழும் ஒருவருக்கு இயல்பான விஷயம். ஆனால், அதற்கு மத விஷயங்களில் பயிற்சி பெற்ற பாதிரியார் என்று ஒருவரை வைத்து, பணத்தாசையும் பெண்ணாசைஉம் கொண்ட, மனிதத் தன்மை இல்லாத அரக்க குணம் கொண்டவர்களாக அவர்கள் திகழும் போது, பாவ மன்னிப்பு என்பது பலரது வாழ்வை முடித்துக் கொள்ளும் விபரீதமாகி விடுகிறது. கடவுளுக்கும் மனிதனுக்கு நடுவே பயிற்சி பெற்ற இடைத் தரகர்களாகத் திகழ்பவர்கள், வெறும் சடங்குகளைச் செய்பவர்களாக நின்றுவிட்டால் பிரச்னை இருக்காது.
கேரளாவில் தற்போது, இந்தப் பாவ மன்னிப்புகள் விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பாவ மன்னிப்பு கேட்டு பாதிரியாரிடம் மண்டியிட்ட பெண்ணை, ஐந்து பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகார்; கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 14 முறை பலாத்காரம் செய்தது என மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள சம்பவங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒரு சம்பவம் சற்று தாமதமாக வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த லில்லி என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அயிரூர் சென்ட் ஜான் சர்ச்சில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார். அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட நடந்த ஒரு தவறு குறித்து அவர் பாவமன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் அந்தத் தகவலை ரகசியமாக வைத்திருக்காத பாதிரியார், வேறொரு பெண்ணிடம் விலாவாரியாகக் கூறிவிட்டார். அந்தப் பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை விளம்பரப் படுத்தி விட்டார். இதனால் என் சகோதரி அவமானம் அடைந்தார். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். ஏற்கெனவே அந்த பாதிரியாருக்கும் என் சகோதரியின் கணவருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது. எனவே அவள் கணவரை கேவலப்படுத்துவதற்காக, என் சகோதரி கேட்ட பாவமன்னிப்பை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டார் அந்த பாதிரியார். இந்தக் காரணத்தால், கடும் மன உளைச்சலில் இருந்த என் சகோதரி 2015ம் வருடம் அக்டோபர் 21ஆம் தேதி பம்பை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக் கடிதத்தில், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் பாதிரியாரின் செயலையும், ஒரு பெண்ணையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நாங்கள் இந்த விவகாரத்தை விடப் போவதில்லை. போலீஸில் புகார் அளிக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
பாவ மன்னிப்பு விவகாரம் இன்னும் எத்தனை குடும்பங்களைச் சிதைத்துள்ளதோ என்று பலரும் பரிதவித்து வருகின்றனர். தங்கள் பலவீனங்களை பாவ மன்னிப்பு என்ற வலையில் பாதிரிகளிடம் சொல்லி, தங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை நினைத்து பலரும் இப்போது கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.